ஞாயிறு, 31 டிசம்பர், 2017

சொற்களில் அந்நியம்- ரமேஷ் ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்"

கதைகளுக்கு துறை சார்ந்த கலைச்சொல் அவசியமில்லையா மொழியை அடுத்த படியில் நகர்த்தி வைக்க அவை தேவை இல்லையா, ஆங்கில வார்த்தைகளை தமிழ் எழுத்துக்கள் சேர்த்து எழுதினால் போதுமா என தொடர் கேள்விகள் அழுத்திக் கொண்டிருக்கின்றன ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்" சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் பொழுதில்.

மடிக்கணினி என எழுதியிருக்கும் போது வீடியோ, கேமரா போன்ற எளிமையான சொற்களை ஏன் தமிழ் சொல்லாக்காமல் கடந்து போயிருக்கிறார். நடுத்தர வர்க்கம் என்ற சொல் தமிழுக்கு பழைய சொல்லே அப்படி இருக்கையில் மிடில்கிளாஸ் என்று ஏன் எழுத வேண்டும். இப்படி பல எளிமையான தமிழ் கதைகளில் புழக்கத்திலிருக்கும் சொற்களையே தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது, இது பிழைதானா என்ற அச்சம் மனதில் உழல்கிறது. கதை கூறுபவனின் நோக்கம் மொழியை அறிமுகம் செய்வதும் தானே, இவ்வாறு தான் அறிமுகம் நேர வேண்டுமா வாசகருக்கு.

"எழிலின் அப்பா" கதை, சொல்லாமலும் சொல்லியும் வலியை கடத்தியது, இத்தொகுப்பின் முக்கியமான கதையாக பார்க்கிறேன், இருந்தும் கவித்துவமாய் நகர்ந்திருக்க வேண்டிய இடத்தில் "ஏதோ எமோஷனலாய் போகிறது" என மிகச் சாதாரணமாக கடந்து போவது சோர்வை அளிக்கிறது. பொழுதுபோக்கிற்கென வாசிப்பவருக்காக எழுதப்பட்டிருக்குமா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை ஏனென்றால் அவர்களுக்கான மொழியில்லை.

நிகிதா கதையில் வரும் தாராவிக்கும் சைனுக்குமிடையிலான நடைப்பாலம் எனது எண்ணங்களில் நிறைந்திருப்பவை அக்காட்சியை வாசித்ததும் உற்சாகம் கொண்டவனாய் அமர்ந்தேன் ஆனால் அதிகம் சித்தரிக்கப்படவில்லை எனக்குள் நெடுநாளுக்குப் பிறகு அப்பகுதியை பற்றிய சித்திரத்தை கடத்திவிட்டமைக்கு நன்றி.

ரமேஷின் மொழி வளமடைய வாழ்த்துகள்,

கருத்துகள் இல்லை: