செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

இரண்டாவது மகள் "இயல்"

ராஜபாளையத்தில் தேனீர் குடித்த பின் பேருந்து கிளம்பியதும் அம்மா கேட்டாள் "பிள்ளைக்கி என்னபேர் வைக்க" என்று "இயல்" எனச் சொன்னதும் "எய்யல்... இதென்ன பேரு ஒரு எழுத்தா" என்றதும் இ ய ல் மூன்றெழுத்து என பிரித்துச்சொன்ன பின்னும் அவளால் சரியாக உச்சரிக்க இயலவில்லை. வேறு ஏதேனும் பெயர் வைக்கலாம்லா என்றும் அது வாயில் வரவில்லை எனவும் கூறினாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது இயல் என்ற பெயர் எப்படி அன்னியமானதாகிப் போனதென்று. ஊருக்கு வந்ததும் பெரியம்மா மற்றும் பக்கத்து வீட்டு அக்காவும் உச்சரிக்க சங்கடப்பட்டார்கள். எனக்குள் ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கிறது இவ்வுச்சரிப்புகள்.

அதன்பின் உறவுகள் மற்றும் நண்பர்களிடத்தில் பெயரை கூறியதும் அதற்கான விளக்கத்தை வைக்கவேண்டியிருந்தது. தங்கை ஒருத்தி "இயல் இசை நாடகம்"னு வருமே அதுவா என்றாள் அதேதான் என்றேன், இன்னொருத்தி அப்படின்னா என்னண்ணேன் என்றாள் "எழுத்துத்தமிழ் முத்தமிழில் ஓர் தமிழ்" என்றேன். நல்லாருக்கு அதையே வைங்க. பின் யாரிடமும் பெயரை கூறியபின் முத்தமிழில் ஓர் தமிழ் என்று சொல்லவேண்டியிருந்தது சிலருக்கு அது தேவையில்லாமலிருந்தது.

எனது தம்பி முத்து "ரக்ஷிதா" என்ற பெயரை மனதில் வைத்திருந்திருக்கிறான். மூத்தவள் பெயர் ஜெபரத்திகா அதன் சாயலோடு இருக்க அப்படி எண்ணியிருப்பான் போல, பின் அவனும் இயல் என்றே அழைத்தான் இரண்டாவது மகளை.

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

அழகான பெயர்...
வாழ்த்துக்கள்.

Nagendra Bharathi சொன்னது…

அருமை