சனி, 15 ஜூலை, 2017

சிறுநீரின் நிறம்

டச்சு நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜோகான்ஸ் வீர்மீர் பற்றிய திரைப்படம் "Girl with a Pearl Earring" இது அவர் வரைந்த ஓவியத்தின் தலைப்புமாகும்.

படத்தின் ஒளிப்பதிவே ஓவியம் போல விரிந்து தொடர்ந்தது, பணிப்பெண் "க்ரீட்" ஓவியரின் வீட்டில் வேலைசெய்ய புறப்படுவதில் கதை தொடங்குகிறது. அவளின் தந்தையும் ஓவியராக இருந்து பின் பார்வை இழந்தவர் அதனால் ஓவிய நுட்பங்களை அறிந்தவளாக இருக்கிறாள். ஒரு காட்சியில் வீர்மீரின் ஓவிய அறையினை சுத்தம் செய்யச் செல்லுமுன் அவரது மனைவியிடம் சாளரத்தின் கண்ணாடிகளை துடைக்கவேண்டுமா எனக்கேட்கிறாள், நிச்சயமாக இதிலென்ன கேள்வி என பதில்வருகிறது. எந்த சலனமுமின்றி க்ரீட் சொல்கிறாள் "அதனால் வெளிச்சம் மாறுபடலாம்" என்று, சிலிர்ப்பை உண்டாக்கியது அந்த சொல்.

க்ரீட் கண்ணாடியினை துடைத்துக் கொண்டிருப்பதை காணும் வீர்மீரின் பார்வையில் அடுத்த ஓவியத்திற்கான பொருள் கிடைத்துவிட்டதெனும் ஆர்வம். அவளை சில நொடி நிற்கவைத்து பின் போகச்சொல்கிறான். ஓவியம் மெல்ல மெல்ல மெருகேருகையில் அவளுக்கு அதனை காணும் வாய்ப்பு கிட்டுகிறது. அக்காட்சியில் ஒளிநிழல்களை பற்றி ஓவியன் விவரிப்பதை கவனிக்கிறாள் ஆனால் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதை அவதானித்தவுடன் சாளரத்தை திறந்து வான்மேகத்தைக் காட்டி அதன் நிறத்தைக் கேட்டவுடன் முதலில் "வெள்ளை" என்கிறாள் பின் அதை மறுத்து சில நொடி பார்வைக்குப்பின் "மஞ்சள், ஊதா, சாம்பல், மேகங்களில் வண்ணங்கள் உள்ளன" என்கிறாள், புன்னகையோடு புரிந்ததா என அவன் கேட்கவும் மேகத்திரள்கள் திரையில் விரிகிறது.




படத்தின் இருபதாவது நிமிடத்தில் வரும் விருந்துக்காட்சியில் வீர்மீரின் ஓவியமொன்று முதல்முறையாக காட்சிப்படுத்துகிறார்கள் அதை விமர்சிக்கும் மற்றொருவர் அதிலுள்ள நிறத்தினை பார்த்து "இந்திய மஞ்ச"ளா என்று கேட்கிறான் ஆமாம் என்ற பதிலுக்குப்பின் தொடர்கிறான் "மாவிலைகளை மட்டுமே உண்ட பசுவின் சிறுநீர் நிறம்".

3 கருத்துகள்:

Kasthuri Rengan சொன்னது…

மிக அருமையான அறிமுகம்

Kasthuri Rengan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி தோழரே.