வெள்ளி, 14 ஜூலை, 2017

அவளுக்கு தலைவலி

"வாரயிறுதியில் என்ன செய்றீங்க" என்பது உரையாடலின் போது இரண்டாவது கேள்வியாக இருந்தது, முதல் கேள்விக்குள் புகுவது காலவிரையம் எனப்படுவதால் இங்கிருந்தே கதைக்க விரும்புகிறேன். வெளியில் செல்லும் பழக்கமிருந்தாலும் வீட்டில் உறவுகளை விட்டுவிட்டுச் செல்வதற்கு மனதொப்பாததால் வாசிப்பும் வரைதலுமே வழக்கமாகியிருக்கிறது மாறாக உறவுகள் ஊர் சென்றுவிட்டால் வீட்டிலிருக்கும் அவசியமில்லாமல் போவதும் உண்மையே.

உங்க மனைவி எதுவுமே சொல்வதில்லையா என்றவள் (அவள் என்பவள் அலுவலக தோழி) கேட்டதற்கு,  சொல்லாமலில்லை என்பதைத்தவிர சொல்வதற்கு நிறைய இருந்தும் கூறவிருப்பில்லாமல் நழுவினேன்.
நானும் வாசிப்பேன் தெரியுமா என்றவள் தொடர்ந்தபோது ரமணிச்சந்திரனையும் ராஜேஷ்குமாரையும் கடந்து வேறொரு எழுத்தாளரையும் பற்றி பேசவில்லை. நாவல் ஏதாவது இருந்தால் கொடுங்களேன் வாசித்துப் பார்க்கிறேன் என்றதும் சுஜாதாவின் எழுத்துக்களை கொடுக்கலாமென்றால் புத்தகம் தற்போது கைவசமில்லை, ஆதலால் வைரமுத்துவின் "வில்லோடு வா நிலவே" புதினம் நினைவிற்கு வந்தது.

வீடடைந்தபின் அதோடு "தண்ணீர்" புதினத்தையும் சேர்த்து பைக்குள் வைத்துவிட்டேன். தண்ணீர் குறைந்த பக்கங்கள் என்பதாலும் அதிகம் குழப்பாத எழுத்தாகையாலும் அத்தேர்வு.
 
வைரமுத்துவா இவரோடது புரியாதே (இவருடையதே புரியாதா என்றெண்ணி அசோகமித்திரனை வெளியிலெடுக்கவில்லை), வேறெதுவுமிருக்கா, அசோகமித்திரனை கொடுத்தேன். பின்னட்டையை பார்த்துவிட்டு "ஓ.. இவருதானா" என்றிழுத்தாள் குரலை.

அவ்வாரயிறுதிக்கு பின் இரண்டு நாள் கழித்து தண்ணீரை வந்தவேகத்தில் மேசை மீது வைத்தவள் "மொக்கையா" இருக்கு என்றாள்.

ஏன்?

தண்ணீர் பிரச்சனையை பற்றியே உரையாடுகிறார்கள் என்றவளிடம் எத்தனை பக்கங்கங்கள் வாசித்தாய் எனக்கேட்டதற்கு தொண்டையிலிருந்தொரு ஓசையெழுப்பிச் சிரித்தாள். மாலை காஃபி நேரத்தில் கூறினேன் "இப்பொழுது வேண்டாம் ஓரளவு பழக்கம் ஏற்பட்டதும் தண்ணீரை வாசித்துப்பார்". தலையை மேலும் கீழும் அசைத்து ம்ம் என்றொலித்தாள்.

நேற்று தலைவலி என்று புலம்பியவளிடம் அடுத்த இருக்கை நண்பர் இரவு திறன்பேசி பார்ப்பதை குறைக்க அறிவுருத்தினார். அவள் "இன்னைக்கு போய் இவரு குடுத்த புத்தகத்த படிக்கணும், தன்னால தூக்கம் வந்துரும்" என்றாள்.

கருத்துகள் இல்லை: