புதன், 17 மே, 2017

காவலர் நண்பனாகியவர்களுக்கு

மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் (2002-2004) போது காவலர் நண்பன் (FRIENDS OF POLICE) எனும் பதவி அல்லது வெற்று வார்த்தை வெகு பிரபலமாக இருந்தது. ஊர்பக்கம் இந்த பட்டத்துடன் திரிபவனுக்கு பள்ளியில் சக மாணவர்களிடையே தன்னை தெனாவட்டாக காட்டும் எண்ணமிருக்கும், அதேபோல் அக்குழுவில் அங்கம் வகிப்பது சிலருக்கு ஏக்கமாக மாறி மனதில் தேங்கி நிற்கும். காவலர்களோடு நண்பர்களாக உலாவுவது எம்மாதிரியான அனுபவத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கும் என்றெல்லாம் தெரியவில்லை (ஒருவேளை அவர்களில் யாரேனும் இந்த பதிவை வாசிக்க நேர்ந்தால் அனுபவங்களை பகிரலாம்), ஆனால் வென்னிமலை முருகன் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்தோடு கூட்டத்தினிடையே ஊர்ந்து போகும் பொழுதில் சாலை நடுவே நின்று "இப்படிப்போ ...அப்படிப்போ" என்று கையில் சிறு கம்புடன் பாதசாரிகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் அவர்களின் இரவுப்பணி மற்றும் குடும்பத்திலிருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் அனுபவம் தனக்கு இல்லையேயென்று காவலர் நண்பனாக இல்லாதவனுக்கு ஏற்படும் தாகம் கச்சேரியில் பாடும் குத்துப்பாட்டோடு அடங்கிப்போகும் என்பது தனி. ஒருமுறை நண்பன் ஒருவனை காவலர் ஒருவர் "படிக்கும்போது இங்கலாம் யாம்ல வாரிய" என திட்டியதாக யாரோ ஒரு நண்பன் கூறியதாக நினைவு.

நண்பனொருவன் தனது அக்காவின் திருமண வாழ்த்துச் சுவரொட்டியில் பெயருக்கு பின்னால் "FRIENDS OF POLICE" என ஆங்கிலத்தில் போட்டுக் கொண்டபின் பலரும் அதுபோன்ற நிகழ்வை கற்பனை செய்யத் தொடங்கியது உச்சபட்சம்.

சென்னையிலும் இதுபோன்ற சிலரை காவலர்களோடு இரவிலும் பகலிலும் பார்க்கலாம். இரவில் பணிமுடிந்து பன்னிரண்டு மணிக்கு வீடுதிரும்பும் போது அனகாபுத்தூரையும் குன்றத்தூரையும் இணைக்கும் அடையாற்று பாலத்தில் ஒரு ஓரமாக காவல்துறை வாகனமொன்று நாள் தவராமல் காவல்!? நிற்பதை காணயியலும், அவர்களோடு காவல் உடையில்லாமல் அதிகபட்சம் இரண்டு பேர் கையில் லத்தியோடு பாலத்தின் நடுவே முன்னும் பின்னும் நகர்ந்து வாகன கண்காணிப்பில் இருப்பதுண்டு. சரக்கு வாகனங்கள் அதிகமாக போகவரயிருக்கும் சாலையது.

சரக்கு லாரியொன்றை வழிமறித்து லத்தி வைத்திருக்கும் காவல் நண்பன்?! அவ்வோட்டுனரிடமிருந்து இருபது ரூபாய் தாளை வாங்குவது எங்களுக்கு தெளிவான காட்சியாகியது அன்று இரவு. நாங்கள் வந்த வாகன ஓட்டுனரிடம் கேட்டபோது "பிச்சக்கார நாயிங்க, ஆனா நல்ல துட்டுண்ணா இவனுங்களுக்கு, எத்துன லாரி போவும் வரும்... லாரிகாரங்க இவனுங்களுக்கு பிச்ச போடவை பத்து பத்தா மாத்தி வச்சிக்கறது, இருவதுக்குமேல எவனும் குடுக்கமாட்டான்" என்றார்.

இன்று சர்தார் பட்டேல் சாலையோரம் வேளச்சேரி பிரதான சாலையருகில் சென்றபோது அப்படியொரு நண்பர்/ன் போர்வெல் லாரியொன்றை ஓரமாக ஒதுக்கி பின் நகர்ந்துசெல்ல கட்டளையிட்டுவிட்டு சற்றே தொலைவில் நின்ற போக்குவரத்து காவலரிடம் சென்றபோது, அவர் "இந்த நேரத்துல அந்த வண்டிக்கு அனுமதி கிடையாது, ஃபைன் போடனும்டா" என்று அவன் தோளில் தட்டினார். கையை அவர்கையில் திணித்தான் சுருட்டிய நூறுக்கும் குறைவில்லாத தாள்கள் கைமாறின, பார்த்துக்கொண்டே கடந்து வந்தேன். வேறென்ன. உங்கள் நண்பன்.

கருத்துகள் இல்லை: