திங்கள், 7 நவம்பர், 2016

கி.ரா தாத்தா

தாத்தா வீட்டில் கோயில் திருவிழாவென்றால் பெரியம்மை, சித்தி மகன்களெல்லாம் ஒன்றுகூடி களித்திருக்க கிடைக்கும் அனேக நாட்களில் ஒன்று. எனக்கு விவரம் தெரிந்தபின் தாத்தாவோ வளத்தம்மையோ அப்பாம்மையோ கதைசொல்லியதாக நினைவில் இல்லை அதற்காக குறைபட்டுக்கொள்ளவில்லை. அதேபோல் பெரும்பாலான வாசகர்கள் எழுத்தாளர்கள் கூறுவதுபோல சாம்புவையோ அம்புலிமாமாவையோ வாசித்ததுமில்லை இவர்களையெல்லாம் என் நண்பன் பாலாவும் அருணும் சொல்லக்கேட்டிருக்கிறேன், அதன்பின் தான் அறிந்தும் கொண்டேன். அப்போதெல்லாம் எண்ணிக்கொள்வதுண்டு கீழப்பாவூரைவிட குறும்பலாப்பேரியில் இலக்கிய பரிச்சயம் அதிகம் என்று, என்னை வாசிப்பிற்குள் உசுப்பி விட்டதும் இவர்கள்தாம்.

ஆனால் பாருங்கள் வீட்டிலுள்ள பெண்களின் பேச்சிலிருக்கும் இலக்கியத்தை தெரு இலக்கியம் ஆக கருதிக்கொள்ளலாம். ஆமாம் உலக இலக்கியமிருக்கும் போது இது கூடாதா. இவர்கள் பேசுவதை காதுகொடுத்தால் போதும் துக்கம் துயரம், காமம் களவு, பிறப்பு இறப்பு என பலவகைப்பட்ட கதைகள் கைகளில் உருளும் பீடியிலைக்குள் சுருட்டி வைக்கப்படும் எஞ்சியது நம் காதுகளுக்கு.

திருவிழா இரவின் பொழுதில் நாங்கள் கதை பகிர்ந்துகொள்வோம் கதைமுடியுமுன் தூங்கிப்போவது வேறு. கி.ரா வின் சிறுவர்களுக்கான நாடோடிக்கதைகள் வாசித்தபோது எனக்கு இந்த இரவுகள்தான் நிழலாடியது. சுண்டைக்கா கதையெல்லாம் பேசிப்பேசிச் சிரித்த கதை. அத்தொகுப்பிலுள்ள கதைகள் பெரும்பாலானவை எங்கள் சிறுவயதில் புழக்கத்திலிருந்தவை. போன வாரம் நூலகத்தில் கிடைத்த கி.ராவின் நாள்குறிப்பிலிருந்து தொகுப்பை வாசித்து முடித்தேன். எத்தனை கதைகள் அதன் மனிதர்கள், இலக்கிய நிகழ்வுகள். சிற்சில விமர்சனங்கள் என ஒரு தாத்தாவைப்போல பகிர்ந்து பேசுகிறார். ஆமாம் எனக்கு அவர் கதைசொல்லி தாத்தாவாகவே தெரிகிறார்.

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க...
கி.ரா. மிகச்சிறந்த எழுத்தாளர்....