ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சிதறிக்கிடக்கும் கதைகள்

கதைகள் அறிமுகம் கிடைக்க நேரம் காலம் இருக்கா என்ன? இருக்கலாம். அப்போது ஐந்து மணி இருக்கும் எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தினுள் நுழைந்தோம். நடைமேடை எண் நினைவில் இல்லை, ஆனால் கடந்த வாரம் சென்ற போது கச்சிகுடா விரைவுவண்டியை ஆறாவது நடைமேடையில் நிறுத்தியிருந்தார்கள். ஒருவேளை இதுவோ அல்லது வேறொரு மேடையாகக்கூட இருக்கலாம். இரண்டாயிரத்து ஏழாம் வருடம்.

வேலைக்காக சென்னையிலிருந்து சார்மினார் நோக்கி விரைய இருக்கிறோம். வண்டி கிளம்புவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்தான் எங்களுக்கான இருக்கையை அடைந்தோம். பெட்டிகளை கீழே தள்ளிவிட்டு அமரும் பொழுதில் பாலா கையிலிருந்த புத்தகத்தை இருக்கையில் வைத்தான். கதவைத்திற காற்று வரட்டும். ஒரு ஆசாமி ஒருவன் மீசை மழித்த மேலுதட்டுச் சிரிப்போடு அட்டையில் காட்சியளித்தார். அறிமுகமில்லாத முகம் என்பதால் எழுத்தாளர் போல என்று நினைத்துக்கொண்டேன். அதிக புத்தக பரிச்சயமில்லா காலம். இராசராசனை பற்றி பேச ஆரம்பித்தான். பொன்னியின் செல்வன், அந்த பெயரையே பிரம்மிக்கத்தக்க வகையில் உச்சரித்து கதையை தொடர்ந்தான். நாங்கள் இல்லை, அவன் பேசுவதோ, புத்தகமோ, அல்லது எங்கள் உருவமோ ஒருவித திகிலை உருவாக்கியதுபோல் ஒரு பார்வை. ஓரக்கண்ணால் பார்த்தபோது எனக்குள் ரத்தநாளங்கள் முறுக்கிக்கொண்டன. அகக்குளிர்வு நிலை. எதிர்பாலல்லவா அப்படித்தானிருக்கும். அதற்கு பிறகு எத்தனையோ பயணங்கள், ஆனால் கானல் நீர் கண்டு காய்ந்துகிடக்கும் பாலைவனங்களே அவை.

காலையில் அவள் தனது சடைமாட்டியை குடும்பத்தோடு குனிந்தும் நிமிர்ந்தும் தேடும் பொழுது சிரிக்காமல் சிரித்தோம் எங்களுக்குள். வண்டி கிளம்பியபின் எந்த ஊர் என கீழிறங்கி எட்டிப்பார்த்தபோது கர்னூல் பெயர்ப்பலகை டாடா சொல்லியது. மழை வெறித்துக் கிடந்த காலையில். அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்வோம். சிரிக்கவும் செய்வோம்.

மும்பை கர்ரீ ரோடு  தொடர்வண்டி நிலையத்திலிருந்து பத்லாபூர் செல்லும் மின்சார வண்டியில் சையன் தாண்டும் பொழுது தொடங்கினார். கணினியின் வன்பொருட்களை பழுது பார்த்துக்கொடுக்கும் அவனுக்கு ஒரு காலகட்டத்திற்கு பிறகு வேலையில்லாமல் போவதன் கதை. அதைத்தவிர்த்து வேறெதுவும் தெரியாத ஒருவனின் கதை எனவும் கொள்ளலாம். குண்டு வெடிப்பொன்றில் இறந்து போவதோடு அவன் முற்று பெறுகிறான். கதை முடிவதில்லை என்றே எண்ணுகிறேன். குண்டு வெடிப்பும் அதன் பல்வேறுபட்ட இழப்புகளும் அங்கங்கே கதைகளை சிதறடிக்கத்தான் செய்கின்றன.

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

அருமையான கதைகள்