வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஆசிரியருக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய என் ஆசிரியருக்கு, என்னை மதித்து அன்றிரவு தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டது மகிழ்வை அழித்தாலும் கோர்வையான கேள்விகள் தொடர்ந்து துரத்திக்கொண்டிருக்கிது. அதற்கான நன்றியோடும் கடமையோடும் என்னுள் கிடக்கும் பல கேள்விகளில் சிவற்றுக்கு உங்கள் மூலம் ஒரு தெளிவினை அடையும் முயற்சியாக இதை எழுதத் துவங்குகிறேன்.

கல்விக்கொள்கை பற்றி எண்ணும் பொழுது அது தவறானது என்ற முடிவில் நின்றுதான் எப்பொழுதும் சிந்தை செய்து வருகிறேன், அது நமக்கு கற்றுக்கொடுப்பது கூலி வாங்கும் தொழிலாளிகளை உருவாக்கத்தான் எனும் பொழுது அப்படித்தான் யோசனை செய்ய வேண்டியுள்ளது. காலத்திற்கேற்றவாறு உயர்கல்வியில் அரசு அதற்கேற்றாற்போல் இல்லை முதலாளி வர்க்கத்திற்கேற்றது போல மாற்றம் கண்டுகொள்கிறது.அதில் தப்பிப் பிழைத்தோர் சிலர். நீங்கள் கூறியது போல நம் கல்விக்கொள்கை மோசமானதுதான்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் பள்ளியினுள் வரும் பொழுது அரசின், பெற்றோரின்  பிள்ளைகளாகவோ இல்லாமல் ஆசிரிய பெருமக்களின் மாணவர்களாக மட்டுமே இருக்க வேண்டும், அதற்கான சூழ்நிலையை அரசு ஏற்படுத்த தவறியிருக்கிறது என்பதை அறிவோம். இருந்தும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் இணையதளங்களில் வெளிவரும் அரசுப்பள்ளி ஆசிரிய முயற்சிகளை கவனித்தால், அதே போன்றதொரு நிகழ்வுகள் பிற பள்ளிகளில் இயலாத ஒன்றாக இருந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது.

பாலியல் வன்முறை பற்றி பேசும் பொழுதில் நாம் வாழும் சூழ்நிலைகளை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். படிக்கும் பிள்ளைகள் தவறிழைக்கின்றன என்றால் அதற்கு அவன் மட்டுமே பொறுப்பா என்றால் அதற்கான பதில் அதுவல்ல. சமூகமும் அது உருவாக்கும் சூழ்நிலைகளும் அவனை தவறுகளை நோக்கி உந்துகின்றது என்பது உண்மைதானே. குறிப்பாக ஊடகம் கைபேசி, தொலைக்காட்சி, திரைப்படமும் அதிலுள்ள பாடல் காட்சிகள், வரிகள், இணையம் என அளவற்ற தகவல்களை மாணவர்களுக்கு பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் கடத்துகின்றன. ஆனால் இவையெல்லாவற்றையும் தெரிந்துகொள்பவர்களுக்கு அதில் நல்லவை தீயவை பற்றி புரிந்துகொள்ள எவ்விதம் பயிற்சியளிக்கிறோம். இங்கொரு கேள்வி எழுகிறது.

இதுபோல் ஓரிரு கேள்விகளில் தேங்கி நிற்கிறோம். அதற்கான பதிலுரைகளை உங்களிடமிருந்தும் ஏனைய ஆசிரியர்களிடமிருந்தும் பெற விரும்புகிறேன்.

1) மாணவர்கள் படிப்பில் கவனமில்லாமல் ரவுடிசம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக கவலை தெரிவித்தீர்கள், இவ்வெண்ணத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க பள்ளியளவில் எவ்வித முயற்சிகள் செய்யப்படுகின்றன? (அடிப்பதும் கண்டிப்பதும் தீர்வாகாது என்பதை உணர்வேன்)

2) பாலியல் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை எண்ணி வருத்தம் கொண்டீர்கள், அவர்களை இச்செயலிலிருந்து  வெளிக்கொண்டுவர பாலியல் கல்வி மிக அவசியம் எனக்கருதுகிறேன் ஆனால் அரசு அதை விடுத்து இலவசங்களால் மனதை பாழாக்குகிறது. இருந்தும் பள்ளியளவில் இதற்காக செய்யவேண்டியதென்ன?

3) பாடத்திட்டத்தை தவிர்த்து வெளியுலகை மொழியை புரிந்துகொள்ள தகுந்த நூலக அமைப்பு நம் பள்ளியில் உள்ளதா இல்லையெனில் பொது நூலகத்தை பயன்படுத்த வாசிப்பதற்கான வாய்ப்புகளை பழக்கங்களை ஏற்படுத்திக் கொடுக்கிறோமா?

நாம் சரியான தலைமுறைகளை உருவாக்கினால் போதும் அரசியல் மக்களுக்கானதாக மாறும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளது. தலைமுறை உருவாக்குதலில் பெரும்பங்கு ஆசிரியர்களான உங்களுக்கே உண்டு என்பதால் உங்களிடமிருந்து பதிலுரை அறிய விரும்பும். மேலும் எங்களாலான முயற்சிகளை மேற்கொள்ள காத்திருக்கும் உங்கள் மாணவர்கள்.

1 கருத்து:

K. ASOKAN சொன்னது…

படைப்பு அனைவருக்கும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது