புதன், 22 ஜூன், 2016

இண்டமுள்ளு அரசனோடு ஓர் அறிமுகம்

முதல்கதையை வாசிக்கத் துவங்கும் போது அரியலூர் பேருந்து நிலையத்தில் இறங்கி நிற்கும் அயலூர்காரன் போல சிறிது விழித்ததை மறுக்க இயலாது. ஒழுங்கை என்ற வார்த்தை எனக்கு அ.முத்துலிங்கம் எழுதிய அக்கா சிறுகதைத் தொகுப்பை நினைவுபடுத்தியது அன்றுதான் அவ்வார்தை அறிமுகம் நிகழ்ந்தது.


பால்யத்திலிருந்து பதின்மம் தொடங்கி இன்றுவரை மனக்குகை இருட்டுக்குள் ஒழிந்துகிடக்கும் நினைவுகளை தன் கதைமொழி வழி வெளிச்சத்திற்கு இழுத்து வந்திருக்கிறார் அரசன். ஒன்றிரண்டைத் தவிர ஏனைய கதைகள் மரணத்தையும் காமத்தையும் தழுவியே பேசப்பட்டிருக்கின்றன. இது திட்டமிட்டு எழுதியதா இல்லை எழுத்தின் போக்கில் அமைந்ததா என்று தெரியவில்லை. மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்து கழிக்கிறார்களோ.


முதலில் கூறியது போல அயலூர்காரனாகவே கதைகளை வாசித்தேன். அரியலூர்வாசியோடு பழகியிருந்தால் வாசிப்பின் பொழுதில் வழக்கு மொழி இன்னும் சுவையை எட்டியிருக்கும். புத்தகம் நம் புது நண்பராகிப்போவது இப்படித்தான் நிகழ்ந்துவிடுகின்றது.


நலுவன் கதை தமிழ் சினிமாத்தனத்தை தன்மீது அப்பிக்கொண்டதை ஊகிக்க முடிந்தது. நாராயணனின் பண்ணையார் குணம், அவனால் பாதிப்படையும் பெண்ணின் மீது களவு பழி சுமத்துதல்.


அரசனுக்கு இது முதல் புத்தகம். இணையத்தின் வழி கரைசேரா அலைகள் வலைப்பக்கத்தில் எழுதிவரும் அன்பர். இவரின் மொழிவளம் இன்னும் சிறக்கட்டும். வாழ்த்துவோம் மொழி செழிக்கட்டும்.

செவ்வாய், 21 ஜூன், 2016

இருக்கட்டுமே அதனாலென்ன

இன்று
கவிதை என்னை பிடித்துக்கொண்டது
நானும் விடுவதாக இல்லை

மேகங்கள் சூழ்ந்தபோது
குளுமையும் அப்படியே

மைனா ஒன்று குரல் கொடுத்தது
அல்லது
அதுபோலொரு தோற்றம்

நான் கற்பனைவாதியா
தெரியாது
இருந்தாலும் இருக்கலாம்
இருக்கட்டுமே அதனாலென்ன

சனி, 18 ஜூன், 2016

இயற்கையா இரசாயனமா ?

ஒற்றை வைக்கோல் புரட்சி நூல் வாங்கியதை படமாக பகிர்ந்ததும் தனக்கு வேண்டுமெனக் கேட்டான் நண்பன் விஷ்ணு. கடந்த வாரம் ஊருக்கு சென்றபோது அவனிடம் ஒப்படைத்துவிட்டேன். அதற்குமுன் பயணத்தில் வாசித்த முதல் ஐம்பது பக்கங்களே ஒரு பக்கவிளைவை உண்டுபண்ணியது. நல்விளைவுதான். எப்பொழுதும் எதையாவது பேசுவோம் அன்று இயற்கை விவசாயத்தை பற்றி பேசினோம். வளர்ச்சியின் பாதையில் அவன் பரிணமிக்க வாழ்த்துகள்.


இரண்டு நாள் முன்னர் பத்ரி சேஷாத்ரி அவரது இணையத்தில் ரசாயன உரங்களை போற்றுவோமென்று கட்டுரையொன்று எழுதி தீர்த்திருக்கிறார். அதற்கான காரணம் இயற்கை விவசாயம் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கவோ பசியை குறைக்கவோ இயலாது என்பதே (?). இது என்ன சிந்தையென்று விளங்கவில்லை.  நிதர்சனம் இதுதானா என்றொரு மிகப்பெரிய கேள்வி. பசியை போக்குவதற்காகத்தான் ரசாயனங்கள் வயல்களுக்கும் பின் வயிற்றுக்குள்ளும் புகுந்ததா. நிச்சயமாக அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. விஞ்சானத்தின் பரிசோதனை முயற்சிக்கு நாம் பலியாகிக்கொண்டிருக்கின்றோம் என்பதை மறுக்க இயலாது. ஒருவேளை விஞ்ஞானம் ரசாயனத்தை மறுத்து இயற்கையே முன்னோடி என்று கூற நேர்ந்தால் இவர்களின் எழுதுகோலும், கணினி விசைப்பலகையும் எங்கு சென்று ஒழிந்துகொள்ளுமோ?

ரசாயன உரத்தைப் பற்றி இல்லை போற்றி பேசுபவர்கள் பன்னாட்டு பற்பசை வேதிப்பொருட்களில் தொடங்கி இன்று வேம்பும் உப்பும் துளசியும் எலுமிச்சையும் கரியும் கலந்துள்ள பசையை பயன்படுத்தச்சொல்லும்  இடத்தினை அடைந்திருக்கிறதே இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?


பற்பசை என்பது சின்ன உதாரணம்தான்.


ரசாயனத்தை உரமாக இட்டு பயிர்வளர்த்து உண்பதைவிட அதையே உண்டு உங்கள் இல்லை நமது பசியையடக்கலாமே. இது மூடத்தனமாகவும் பயிர்விளைவித்து மறைமுகமாக நஞ்சையுண்பதை அறிவியலென்றும் எண்ணியிருக்க எத்தனித்தால் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.


இயற்கை விவசாயம் ஒருபுறம் செழிக்கட்டும் மறுபுறம் உணவளிக்கும் ரசாயனத்தை போற்றுவோம் என்னும் புரட்டுவாதத்தால் யாருக்கும் பயனில்லை.

விவசாயம் காக்க வழிபோவோம் இயற்கையின் பாதையிலே.

திங்கள், 13 ஜூன், 2016

ஒழுங்கின்மை

பசியை தீர்க்க நகர்ந்தபோது
பாதைக்கு நடுவில்
பூக்கள் ஒழுங்கு படுத்தி
நடுவிலொரு விளக்கு
அதன் ஒழுங்கில்லாத நிலையை கற்பனை செய்தேன்
அழகாயில்லாமல் இருக்கலாம்
ஆனால் நான் ரசித்தேன்
அதன் ஒழுங்கின்மையை

வெள்ளி, 3 ஜூன், 2016

தாகம்

முருங்கைவிதைகளை நீருக்குள் இட்டு பின் வடிகட்டி குடிப்பதால், கிருமிகளை விலக்கி சுத்தமான நீரை பருகலாம் என்ற தகவலை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்தபோது. "என்ன புழுக்கம் புழுங்குது" என்ற முணுமுணுப்போடு வாசலில் என்னருகில் வந்தமர்ந்தாள்.

"தண்ணீ தாகமே நிக்கமிண்டக்கிடா, உனக்கெப்படியிருக்கு" என்றாள்.

"மண்பானைத் தண்ணீ நல்லாத்தாம்ம இருக்கு, கொஞ்சநாள்ல பழகிரும். இனி துட்டு குடுத்து தண்ணி வாங்குததா உத்தேசமில்லம்ம" என்றதோடு "முருங்க வெத போட்டு குடிச்சா கிருமி போயிருமாம், இதுல போட்ருக்கான்" என்றதும்.

"முருங்க வெதைக்கி மரம் வளக்கியாங்கோம்" என்று கூறிவிட்டு காற்றுக்கும் மரமில்லாத இடத்தில் தன்முந்தானையே சுழற்றி கொஞ்சம் காற்றினை உற்பத்தி செய்தாள். நான் அம்மாவைப் பார்த்தேன் லேசாக சிரித்தாள். அது என்னை கேலி செய்வதானவொரு மன உழற்றியை உண்டுபண்ணியது.

இரவில் தூங்குமுன் "உங்கம்ம பக்கத்துவீட்ல போய் தண்ணீ வாங்கி குடிக்காவ" என்றாள் தனம், என் மனைவி.

"ம்" என்றேன் யோசனையோடு.

"அந்தம்மா நேத்து சாய்ங்காலம் யாங்கிட்ட சொல்லுது, நல்ல தண்ணீ வாங்கி குடிக்கலாம்லா. நான் வேணும்னா கேன் போடச் சொல்லவான்னு"

நான் மீண்டும் "ம்" என்றேன்.

திரும்பிப் படுத்துக்கொண்டாள். சாளரம் திறந்திருந்தும் வராத காற்றில் வியர்த்துக்கொண்டிருந்தது.

இரண்டாவது நாள் சனிக்கிழமை மாலை ஞெகிழி டப்பாவை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நீரோடு திரும்பினேன். "ஏன் ராசா தண்ணீ கொண்டாந்துட்டான்" என்றாள். பால்யத்தின் கிராமத்து வீட்டிற்கு இரண்டு குடம் கட்டி அய்யனார் கோவிலிலிருந்து நீர் எடுத்துவந்த போது அவள் உதிர்த்த இதே வார்த்தைகள் நினைவில் ஒழுகியதும் அவளைப்பார்த்தேன் மெல்லச் சிரித்தாள்.

வியாழன், 2 ஜூன், 2016

கலைநிகழ்ச்சியெனும் கப்பித்தனம்

சனிக்கிழமை இரவு மணி பத்தை கடந்தபோது நாங்கள் கீழப்பாவூர் மைதானத்தை தாண்டி நகர்ந்து கொண்டிருந்தோம். காமராஜருக்கு விழா என நினைக்கிறேன், அவரது குடும்ப பொதுவாழ்வின் நிகழ்வுகளை ஒருவர் தடவித்தடவி பேசிக்கொண்டிருந்தார் (காலையிலோ மாலையிலோ முன்னொரு நற்பகல் வேளையிலோ யாரோ கூறக்கேட்டதை). வீடடைந்தபோது ஒரு தலைவர் நீண்ட நெடிய பார்வை பற்றி பேச முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பெண்களை கொச்சைப்படுத்து திரையிசைப்பாடல்கள் (இவர்கள் இதை கலைநிகழ்ச்சி எனக் கூறுவார்கள்) ஒலிக்கத்துவங்கியது, குழந்தைகளை இதற்கு தயார் படுத்திய அந்த கேவலப்பிறவியை செருப்பெடுத்து அடித்தாலும் தகும் என்றே எண்ணினேன். நீண்ட நெடிய பார்வை பற்றி பேசிய அந்த தலைவருக்கு மேடையில் நடக்கும் சீரழிவு நிகழ்வு புலப்படவில்லை போல.(ஒருவேளை தூரப்பார்வையோ).

இறுதியாக பிட்டுப்படண்டோய் என்றொரு பாட்டு காதில் விழுந்ததாக நினைவு.