வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நவீனநகரமெனும் உலகமகா புழுகல்

நவீன நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) உருமாறப்போகும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது, இந்த கவர்ச்சியான வார்த்தை நமக்கு அளிக்கப்போவது என்ன?

நவீன திட்டங்களால் மேம்படுத்தப்படும் என செய்திகளின் வாயிலாக அறியும் வேளையில்  நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனும் கேள்வி எழுகிறது. மேலும் இத்திட்டம் மக்களின் அன்றாட வாழ்வில் ஏதும் மாற்றத்தை நிகழ்த்துமா இல்லை முகத்துச்சாயம் பூசிக்கொள்ளும் நடிகைகள் போல நகரம் தன்மீது  கட்டடங்களையும், விளக்குகளையும் அணிந்துகொண்டு அமைதியாகிவிடுமா?.

எதை மேம்படுத்தப் போகிறது அரசு சாலையில் பள்ளங்களையா? பேருந்தின் உடைந்த இருக்கையையா , துருப்பிடித்து தொங்குகின்ற ஏறும் இறங்கும் படிகளையா? இல்லை
நகரத்து சுவர்கள் அனைத்திலும் "நவீன நகரம் தந்த நமோவே அம்மாவே" என்றும்  இன்னபிற அரசியல் வியாதிகளை, சினிமா போலி புரட்சியாளனை தாங்கி ஒட்டிக்கொண்டிருக்கும் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தடை உருவாகுமா? அதற்கு சாத்தியமுண்டா நவீன நகரத்தில்?

இந்த செய்தியின் மறுபக்கம் வெளியாகியிருக்கும் அல்லது வெளியாகாமல் கரைந்துபோன அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க ஏதும் செய்வார்களா?

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் இருப்பதை விட்டு இல்லாததை பற்றிக்கொள்ள அரசு துடிப்பதன் காரணமென்ன?

இருக்கும் திட்டங்களால் எஞ்சி கிடக்கும் ஏரியும் குளமும் சமவெளியும் காடுகளும் இத்திட்டத்தால் மூடுவிழா காண நேரிடுமோ?

தொலைநோக்கு திட்டமாக உருவாக்கப்பட்ட 4000 அணைகள் இருந்தும் தற்போது  நீருக்காக விழி பிதுங்குகிறோமே, இதே நிலை அல்லது இதைவிட மோசமான நிலை இந்த நகரத்தால் உருவாகினால் அதை எவ்விதம் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்?.

விவசாயத்தை ஊக்குவிக்க ஏன்  தயங்குகிறார்கள்? ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் பயிர்  மற்றும்   காய்கனிகளில் நச்சுத்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டுகிறதே அதைப்பற்றி அறிக்கை விடத் தயங்குகிற அரசு நவீன நகரத்தில் உருவாக்கப் போவது என்ன? நிச்சயம் விவசாயத்திற்கும் இத்திட்டத்திற்கும் நேரடி உருவாக்கத்திற்கான தொடர்பு இல்லையென்றாலும் மறைமுகமாக மிகப்பெரிய அழிவு இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

இந்த நகரத்தில் மக்களின் பங்கு என்னவாக இருக்கும்? விதிமுறை மீறலை ரத்தத்தில் இறவாது கலந்தவர்கள்தான் நாம்.  ஓட்டுப்போடவும், மாநாட்டிற்கும், மறியலுக்கும் ஐநூறோ ஆயிரமோ வாங்கி நக்கிக்கொள்வதோடு அரசியல் கடமை முடிந்துவிட்டது என்ற மட்டமான எண்ணம். படித்து பட்டம் வாங்கியவர்களே இப்படி மனநோய் பிடித்துத் திரிந்தால் பட்டறிவை பாடையில் ஏற்றிவிட்ட டாஸ்மாக் பாமரனை என்ன சொல்ல?.

அரசியல் பேசுங்கள் சமுதாயம் முன்னேற முயற்சி செய்யுங்கள் என நண்பர்களிடம் கூறவிளையும் போது, சமுதாயமே வேண்டாம் வேறு ஏதேனும் பேசுங்களேன் என்று கூப்பாடு. நாளைய பிள்ளைகள்  நம்மைக் காறி உமிழும், அதிலேனும் மேனியிலுள்ள அழுக்கை சுத்தம் செய்யத் தயாராக இருப்போம். அரசை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.

நவீனநகரம் உலகத்தரம் என்கிறார்கள், இதுவரை சந்தையில் உலாவும் உலகத்தரங்கள் நமக்கு அளித்த வாழ்வியல் நன்மை என்ன?

உலகத்தரமென்பது உலகமகாப் புழுகல் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

மரணத்திற்கான வீதி

இரவின் விளிம்பில் நின்று கதிரவன் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். 

இரண்டு வாரமாக நாவலூருக்கு பயணிக்கிறேன். புது வழி புது வேலை, பயணநேரமும் அதிகம், காலை வேளை பேருந்தில் இருக்கைக்கு சாத்தியமுண்டு என்பதனால் பல்லி போல் ஒட்டிக் கொண்டிருந்தது தியோடர் பாஸ்கரன் எழுதிய “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” புத்தகம்.

காடு, காட்டுயிர்கள், சரணாலையங்கள், புலிகள் காப்பகம், சிற்றுயிர்கள்,  அழிந்த உயிர்கள், நாம் அழித்துக் கொண்டிருக்கும் உயிர்கள் பற்றி பகிரப்படும் தகவல்கள் இதுவரை வாசிக்காதது. புலி ஏன் தேசிய விலங்காக இருக்கிறது என்பதற்கு இதற்கு முன் என்னிடம் பதிலே இல்லாமல் இருந்தது, ஆனால் இந்த புத்தகம் அதற்கான காரணத்தையும், புலிகள் சுற்றுச்சூழலுக்கு எத்தனை அவசியம் என்பதையும் இயல்பாக விவரிக்கிறது. உணவுச்சங்கிலியை ஐந்து மதிப்பெண்ணிற்காக காலாண்டுக்கும், அரையாண்டுக்கும், முழுவாண்டிற்கும் வாசித்த நம்மில் எத்தனை பேருக்கு இப்போது அது நினைவிருக்கும்?. அதில் புலிக்குத்தான் முதலிடம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?. எனக்கு மட்டும்தான் இப்படி என்றால் என்னைவிட நீங்க புத்திசாலியாக இருக்கலாம் இல்லை நடிக்கலாம். பள்ளிக்கு வெளியே கற்கவேண்டியது மிகையாக கொட்டிக் கிடக்கிறது என்பதை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அதையே கூறுகிறது.

நச்சுத்தன்மையற்ற பல்லியை உணவுக்கு எதிரியாக திரித்து விட்டதற்கு நாம் தான் காரணம் என்பது நமக்குத் தெரியுமா? உணவில் பல்லி விழுந்ததால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனக் கூவும் ஊடகங்களின் அறியாமையை பற்றி நாம் அறிந்திருக்கிறோமா?  யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது என்கிறோம், இதில் உள்ள உண்மையை அறிந்திருக்கிறோமா? பக்கத்து மாநிலம் நமது காய்கனிகளில் நச்சுத்தன்மை இருப்பதால் தடை செய்வேன் என்கிறது இதற்கு யார் காரணம்?

காட்டுயிர் பற்றி அறிந்துகொள்ள தமிழிலில் சொற்கள் உருவாகவில்லை எனவும் அதுவே நம்மை இத்தனை காலம் காடுகளை பற்றி புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் தெரியாமல் நெடுந்தூரம் அழைத்து வந்திருப்பது வேதனை அழிப்பதாக தெரிவிக்கிறார். மேலும் பல நூல்களை இத்தோடு அறிமுகம் தருகிறார். நிச்சயம் வாசிக்கவேண்டிய பெட்டகம்.

நாம் காடுகளை அழித்துக் கொண்டிருப்பதற்கு மௌன சாட்சிதான் பள்ளிக்கரணை சதுப்புநிலம். மேடவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் சாலையில் குறிப்பிட்ட தொலைவிற்கு பிறகு சதுப்புநிலம் கண்ணுக்கு புலனாகிறது. சுற்றிலும் கட்டிடங்கள் வளர்ச்சியின் பெயரில் நீரை உறிஞ்சி உயர்ந்து நிற்கிறது. அங்கிருக்கும் சாலைகளெல்லாம் மரணத்திற்கான வீதி என்பதைத்தவிர வேறென்ன?.

சதுப்புநிலத்தில்
சகிப்புத் தன்மையோடு
நீரலையில் உடல் நனைத்து
புல் தரையில்
சிறகு உலர்த்தும்
உள்ளூர்ப் பறவைகளும்

வலசை வரும்
வெளிநாட்டுப் பறவைகளும்

அந்தரத்தில்
சிறகுலர்த்தும்
பெயரறியா பறவையொன்றும்

பேய்களென்று
நமை நினைக்கும்…..