வியாழன், 13 மார்ச், 2014

மலடு மண்டப் போகும் மாநிலம்

வந்துவிட்டது அந்த நாள்
ஆம் ! வந்தே விட்டது ..

அருங் காட்சியகத்தில்
வில்லையும் வாளையும்
வீரத்தையும் கேடையத்தையும்
பார்த்து மெய் சிலிர்க்கும்
நாம் ..!

நாளை நம் சந்ததிக்கு
இக்கலை பொருளுடன்
விட்டு பூட்டிப் போகும்
அரிய பொருள்
என்ன வாயிருக்கும் ?

நாம் உண்டு களிக்கும்
நெல் மணிகள் தான்
ஆம் !!
நெல்மணிகள் தான்..

பாரதத்தின் பாட்டன் தொழில்
அது வேண்டாம்
பாடை யேற்றுங்களென
அறைகூவல் விடுத்தாயிற்று
மந்த ம(த்)தி யரசு!!

மிஞ்சியிருக்கும் வயல்வெளியும்
மீத்தேனுக்கும் நிலக்கரிக்கும்
முந்தி விரிக்க போகிறது..
பரதேசம் போக ஏற்பு கொள்
பாரதத்தின் தயவு கொண்டு....

வேதனை மட்டும் கொண்டு
வேடமிட்டு வாழ்ந்திடுவோம்
வேறென்ன செய்திடலாம் ??

போராடி பார்க்கலாமா..
போராடியவ ரெல்லாம்
போராளியல்ல தீவிரவதியாம் ...

வெற்றி மட்டும் இயைந்திடுமா..
இத்திரு நன்னாட்டிலே !!
வேறென்ன செய்யலாம் ?

ஆங்!!
அதிநுட்பக் கைபேசி கொண்டு
வெட்டித் தள்ளலாம்
பச்சைப் புல்வெளியையும்
நெற்ப் பயிரையும்
சம்பாவையும் கம்பையும்
உளுந்தையும் எள்ளையும்
சோளத்தையும் கரும்பையும்
வாழையையும்
நிலத்தடி நீரூற்றையும்
புகைப் படமாய்..!!

புதைத்து விடலாம்
முகநூலிலும்
இன்ன பிற தளங்களிலும் ..
ஆம் ! புதைத்தே விடுங்கள் ..

இது தானே நாமும்
அரசும் சாசனமும்
விரும்பி ஏற்கும்
அறப் போராட்டம் ..

வரும் சந்ததிக் கென
ஓடி ஓடி
உழைத் திருப்போம்
களைத் திருப்போம்
பசித் திருப்போம்
உண்ண
உணவிருக் குமா ?!

                                                                             -------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: